New Rules Tamil Nadu Amateur Kabaddi Association 2025

தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகத்தின் புதிய போட்டி விதிமுறைகள்

அறிமுகம்:

தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம், கபடி போட்டிகளை நடத்துவதற்கான புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக சில மாவட்டங்களில் கழகத்தின் அனுமதியின்றி போட்டிகள் நடத்தப்பட்டு சில பிரச்சனைகள் எழுந்ததால், கபடி விளையாட்டின் வளர்ச்சியைப் பாதுகாக்கவும், வீரர்களை ஊக்குவிக்கவும் இந்த புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த விதிகளைப் பின்பற்றி மட்டுமே இனி போட்டிகளை நடத்த வேண்டும் என்று அமைப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

New Rules Tamil Nadu Amateur Kabaddi Association 2025


முக்கிய தீர்மானங்கள் மற்றும் விதிமுறைகள்:

1. அனுமதி மற்றும் வீரர்கள் பதிவு:

  • எந்த ஒரு கபடிப் போட்டியை நடத்துவதாக இருந்தாலும், மாவட்ட கபடி கழகத்திடம் முறைப்படி அனுமதி பெற வேண்டும்.

  • கழகத்தில் பதிவு செய்த அடையாள அட்டை (ID Card) வைத்துள்ள வீரர்கள் மட்டுமே போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்பட வேண்டும்.

2. போட்டி  நேரம்:

  • போட்டி நேரம்: போட்டிகளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையிலும், தேவைப்பட்டால் இரவு 8 மணி முதல் 10 மணி வரையிலும் நடத்தலாம். இரண்டு நாட்களுக்குள் போட்டியை நடத்தி முடிக்க வேண்டும்.

  • போட்டி முறை: அனைத்துப் போட்டிகளும் "லீக் மற்றும் நாக்-அவுட்" (League cum knockout) முறையில்தான் நடத்தப்பட வேண்டும்.

  • அணிகளுக்கான அட்டவணை (Fixture): போட்டியில் பங்கேற்கும் அணிகளின் பிரதிநிதிகள் முன்னிலையிலேயே போட்டி அட்டவணை தயாரிக்கப்பட வேண்டும்.

  • அமைப்பாளர் அணி: போட்டி அமைப்பாளர்கள் தங்களுக்கு சாதகமாக 'செட்டிங்' அணிகளை களமிறக்கக் கூடாது. மேலும், தங்கள் அணி வெற்றி பெறும் வகையில் போட்டி அட்டவணையைத் தயாரிக்கக் கூடாது.

  • தாமதமாக வரும் அணிகள்: தாமதமாக வரும் அணிகளை விளையாட அனுமதிக்கக் கூடாது.

3. அணிகளின் எண்ணிக்கை:

  • மாவட்ட அளவிலான போட்டி: இரண்டு இடங்களில் போட்டி நடந்தால், அதிகபட்சமாக 40 அணிகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.

  • மாநில அளவிலான போட்டி: மாநில அளவிலான போட்டிக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தலா 16 அணிகளை மட்டுமே அழைக்க வேண்டும். இந்த அணிகளுக்கான போட்டி அட்டவணையை முன்கூட்டியே தயார் செய்ய வேண்டும்.

4. அணிகளுக்கான வசதிகள்:

  • தங்குமிடம் மற்றும் உணவு: போட்டியில் பங்கேற்கும் அனைத்து அணிகளுக்கும் சிறப்பான தங்குமிடம் மற்றும் உணவு வசதிகளை அமைப்பாளர்கள் செய்து தர வேண்டும்.

  • பெண்கள் அணிகளுக்கான பாதுகாப்பு: பெண்கள் அணிகளுக்கு தனியாகவும், பாதுகாப்பானதாகவும் தங்குமிட வசதி அளிக்கப்பட வேண்டும். பெண் அணியின் பயிற்சியாளர் ஆணாக இருந்தால், அவருக்கும் தனியாக தங்குமிடம் வழங்க வேண்டும்.

  • பயணப்படி: பங்கேற்கும் அணிகளின் தேவைக்கேற்ப பேருந்து அல்லது ரயில் பயணச் செலவுகளை அமைப்பாளர்கள் வழங்க வேண்டும்.

  • மருத்துவக் குழு: போட்டி நடைபெறும் இடத்தில் அவசர உதவிக்கு மருத்துவக் குழு (Medical Team) கண்டிப்பாக இருக்க வேண்டும்.

5. இதர விதிகள்:

  • பிரச்சனை செய்யும் அணிகள்: போட்டியில் ஏதேனும் அணி ஒழுங்கீனமாக நடந்துகொண்டால், அது குறித்த முழுமையான அறிக்கையை அமைப்பாளர்கள் கழகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும்.

  • சிறப்பு விருந்தினர் ஆட்டக்காரர் (Guest Player): வேறு அணிகளிலிருந்து விருந்தினர் ஆட்டக்காரரை விளையாட வைத்தால், அதற்குக் கழகத்திடம் (TNAKA) முன் அனுமதி பெற வேண்டும். ஒவ்வொரு போட்டிக்கும் ஆட்டக்காரர்களை மாற்ற அனுமதிக்கப்பட மாட்டாது.

  • மாநில அளவிலான போட்டிகள்: மாநில அளவிலான அழைப்புப் போட்டிகள், அகில இந்திய கபடி கழகத்தின் விதிமுறைகளின்படியே நடத்தப்பட வேண்டும்.

இந்த விதிமுறைகளை கண்டிப்பாகப் பின்பற்றி, கபடி விளையாட்டின் வளர்ச்சிக்கும், வீரர்களின் முன்னேற்றத்திற்கும் ஒத்துழைப்பு தருமாறு அனைத்து போட்டி அமைப்பாளர்களையும் தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.

முக்கிய நோக்கங்கள் (சுருக்கமாக):

  • மாவட்டம் அல்லது மாநிலம் எந்த அளவிலும் போட்டிகளை நடத்தினாலும், அது முறையாக திட்டமிடப்பட்டு, நடத்தை சீராக இருக்க வேண்டும்.

  • வீரர்கள் தாய்மாவட்டத்தின் சார்பாக மட்டுமே பங்கேற்க வேண்டும்.

  • தவறான அணிகள், அனுமதி இல்லாத அணிகள், வெளியே இருந்து கூட்டப்பட்ட வீரர்கள் ஆகியோர் பங்கேற்க அனுமதி இல்லை.

  • போட்டிகளில் அறிக்கைகள், fixture, மருத்துவ வசதி, உணவு, தங்குமிடம் ஆகியவை கட்டாயம் உள்ளடக்கப்பட வேண்டும்.

TNAKA கடிதம் எண் Ref: TNAKA / 188 / 2025 வாயிலாக அறியப்பட்ட செய்தியின் தொகுப்பு

Post a Comment

0 Comments